Saturday 7 July 2012


ஈமு கோழிகள்-ஒரு அறிமுகம் :



ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தை சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலை மதிப்பு மிக்க இறைச்சி, முட்டைகள், தோல் மற்றும் தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்பவெப்பநிலையிலும் தாங்கி வளரக்கூடியவை. 
ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட் இனத்தை சார்ந்தவை.
இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழிகள் உலகத்தின் பல பகுதிகளில் அவற்றின் இறைச்சி, தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதியாக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. 
இப்பறவைகள் திறந்த வெளியிலும், தீவிர  முறையிலும் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.

ஈமு கோழிகளின் உடலமைப்பு :

ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய தலையினையும், கால்களில் மூன்று விரல்களையும் கொண்டதாக இருக்கும்.மூன்று மாத வயது வரை ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று  காணப்படும். ஆனால், இந்த கோடுகள்  4-12 மாத வயதில் மறைந்துபழுப்பு நிறமாக மாறி விடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60 கிலோ உடல் எடையுடையவையாக இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின் காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில்களுடனும் காணப்படுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின் இயற்கையான உணவு, பூச்சிகள், செடிகளின் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைகளை விட பெரியதாக இருக்கும். ஈமுக்கள் முப்பது வருடம் வரை வாழக்கூடியவை. ஈமுக்களை மந்தையாகவோ அல்லது ஆண், பெண் பறவைகளாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.




ஈமுகுஞ்சுகளை பராமரிக்கும் முறைகள்

ஈமு குஞ்சுகள் சராசரியாக 370-450 கிராம் எடை இருக்கும் (முட்டையின் எடையில் 67 சதவிகிதம்). குஞ்சு பொரித்து முதல் 48-72 மணி நேரத்தில் குஞ்சுகளை குஞ்சு பொரிப்பானிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் முட்டையின் மஞ்சள் கருவினை குஞ்சுகளின் உடல் நன்கு உறிஞ்சிக்கொள்வதற்கும், குஞ்சுகளின் உடல் நன்கு உலரச்செய்வதற்கும் ஏதுவாகிறது. கோழிக்குஞ்சுகளைப் போலவே ஈமுக்குஞ்சுகளுக்கும் முதல் சில நாட்களுக்கு அதிக வெப்பநிலை தேவைப்படும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே குஞ்சுக்கொட்டகையை கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து ஆழ்கூளமாக நெல் உமியினைப் போட்டு அதன் மீது சாக்கினை பரப்பி விட வேண்டும்.குஞ்சு கொட்டகையில், ஈமு குஞ்சு ஒன்றிற்கு 4 சதுர அடி இடம் தேவைப்படும். குஞ்சு கொட்டகையில், முதல் 10 நாட்களுக்கு, 90°F வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு, பத்து நாள் முதல் 3-4 வாரங்களுக்கு, 85°வெப்பம் குஞ்சுக்கொட்டகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குஞ்சுக்கொட்டகையில் மேற்குறிப்பிட்ட வெப்பநிலையினை பராமரிப்பதற்காக நூறு சதுர அடி இடத்திற்கு ஒரு 40 வாட்ஸ் பல்பினை பயன்படுத்தவேண்டும். சரியானவெப்பநிலையினை குஞ்சுக்கொட்டகையில் பராமரிப்பதன் மூலம் குஞ்சுகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு வழி செய்யலாம். குஞ்சு கொட்டகையில் போதுமான அளவு தீவனத்தட்டுகளும், தண்ணீர் தட்டுகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குஞ்சுகள் வெளியே சென்றுவிடாமல் இருக்க, 2.5 அடி உயரத்திற்கு ஒரு தடுப்பினை அமைக்கவேண்டும். மூன்று வார வயதில் குஞ்சு தடுப்பினை இன்னும் அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு தேவையான இடஅளவினை அதிகப்படுத்தி, ஆறாம் வார வயதில் இத்தடுப்பினை எடுத்துவிடலாம்.முதல் 14 வாரத்திற்கு அல்லது குஞ்சுகள் 10 கிலோ உடல் எடையினை அடையும் வரை, குஞ்சுத்தீவனத்தை ஈமுக்கோழி குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். இந்த வயதில் ஈமு குஞ்சு ஒன்றிற்கு திறந்தவெளியுடன் 30 சதுர அடி இடம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொட்டகையின் தரை சுத்தமாகவும் ஈரத்தன்மை இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.



ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

1.குறுகிய இடத்தில் அளவுக்கு அதிகமாக ஈமுக்கோழி குஞ்சுகளை வளர்க்கக்கூடாது.
 2.குஞ்சு பொரித்து முதல் சில நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரினை கொடுக்கவேண்டும். மேலும் குடிநீரில் எதிர் அயற்சி மருந்துகள் கலந்து கொடுக்கவேண்டும்.
3.தண்ணீர்த் தட்டுகளை தினமும் சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். அல்லது, தானியங்கி தண்ணீர் அளிப்பானை பயன்படுத்தலாம்.
4.ஈமு குஞ்சுகளுக்கு தீவனத்தில் வைட்டமின் மற்றும் தாது உப்புக் கலவையை கலந்து கொடுக்க வேண்டும்.
5.முறையான உயிர் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த, எப்பொழுதும் பண்ணையில் ஒரே சமயத்தில் குஞ்சுகளை வாங்கி, வளர்ந்தவுடன், ஒரே சமயத்தில் விற்று விட வேண்டும்.
ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது செய்யக்கூடாதவை
1.ஈமு குஞ்சுகளை வெய்யில் நேரத்தில் கையாளக்கூடாது. குஞ்சுக்கொட்டகை எப்பொழுதும் அமைதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
2.தெரியாத நபர்களையோ அல்லது தேவையற்ற பொருட்களையோ பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது
3.குஞ்சுக் கொட்டகையில் எப்பொழுதும் ஆழ்கூளத்தினை பயன்படுத்த வேண்டும்.
4.கொட்டகையின் தரை வழவழப்பாக இருக்கக்கூடாது. ஏனெனில், தரை வழவழப்பாக இருந்தால், ஈமுக் குஞ்சுகள் ஓடும் பொழுது தரை வழுக்கி அவற்றின் கால்கள் உடைந்து விட வாய்ப்புள்ளது.


http://almaemufarms.com/component/content/article/67.html



No comments:

Post a Comment